தமிழ்நாடு (Tamil Nadu)

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

Published On 2024-08-05 09:16 GMT   |   Update On 2024-08-05 09:16 GMT
  • பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.
  • பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை:

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூர் சென்று அங்கு நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட்டார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நிருபர்கள் பேட்டி கண்டனர். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- பருவமழைக்கு முன்பே சென்னையில் மழை பெய்து வருகிறது. நேற்று ஒருநாள் மட்டும் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்னும் மழை அதிகம் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதே?

பதில்:- எப்படிப்பட்ட மழை வந்தாலும் சந்திப்பதற்கு இந்த அரசு தயாராக இருக்கிறது. பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.

கேள்வி:- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வேண் டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வலுத்துள்ளது. நீங்கள் (முதலமைச்சர்) பரிசீலிப்பீர்களா?

பதில்- கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர இன்னும் பழுக்கவில்லையே.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து தி.மு.க. நிர்வாகிகள் ஆவலுடன் எதிர்பார்ப்பதால் அமைச்சரவை மாற்றத்திற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை.

முன்னதாக கொளத்தூர் வீனஸ் நகர் சென்று தமிழ்நாடு மின்சார மற்றும் மின் பகிர்மான கழகத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் துணை மின் நிலையம் மற்றும் குடிநீர் வழங்கல் கழிவுநீர கற்று வாரியத்தின் கழிவுநீர் வெளியேற்று நிலையத்தை பார்வையிட்டார்.

அதன்பிறகு அங்குள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளியில் கூடுதல் கட்டிடம் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி மையம், ஜி.கே.எம். காலனி 27-வது தெருவில் உள்ள தொடக்கப் பள்ளி, 10 உயர் கோபுர மின் விளக்குகள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் சீனிவாச நகர் 3-வது பிரதான சாலையில் புதிய சென்னை தொடக்கப்பள்ளிக்கு அடிக் கல் நாட்டினார். அங்குள்ள நேர்மை நகரில் சி.எம்.டி.ஏ. மூலம் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

தணிகாசலம் நகரில் ரூ.91 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் உபரி நீர் கால்வாயினை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பருவ மழை காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ரூ.91.36 கோடி மதிப்பில் தணிகாசலம் நகர் உபரிநீர் கால்வாயினை திறந்தவெளி கால்வாய் மற்றும் மூடிய வடிவிலான கால்வாயாக மேம்படுத்தும் பணியினையும் தொடங்கி வைத்தார்.

பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு ரூ.109 கோடியே 89 லட்சம் செலவில் தரை தளம் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டு வரும் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமான பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கொளத்தூர் தொகுதியில் மொத்தம் ரூ.8.45 கோடி செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். ரூ.3.25 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் சென்றிருந்தனர்.

Tags:    

Similar News