மு.க.ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்சில் எடப்பாடி பழனிசாமி சிக்குகிறாரா?
- தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் கவர்னர் மீது கண்டன கணைகளை வீசி வருகின்றன.
- எடப்பாடி பழனிசாமி கழுவும் மீனில் நழுவும் மீனை போல் இதெல்லாம் புராணம் படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். எனக்கு தெரியாது என்று நழுவி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் எழுப்பப்படும் சித்தாந்த மோதல்களுக்குள் சிக்கி அரசியல் கட்சிகள் படாதபாடு படுகின்றன.
ஆரியமாம்....! திராவிடமாம்...! யார் சொன்னது? அப்படி எதுவும் கிடையாது. இது ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய பிரிவினை. பள்ளிப் படிப்பை பாதியிலே முடித்துவிட்டு இந்தியாவுக்கு வந்த கால்டுவெல் உருவாக்கிய கருத்தாக்கம் இது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கொளுத்தி போட்டது பற்றிக்கொண்டது என்பது மட்டுமல்ல. அது பற்றிய விவாதங்களையும் பொதுத்தளத்தில் ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் கவர்னர் மீது கண்டன கணைகளை வீசி வருகின்றன. பா.ஜனதாவுடன் முறைத்துக் கொண்ட அ.தி.மு.க. இந்தப் பிரச்சினையை எப்படி அணுகுவது? மக்கள் என்ன நினைக்கிறார்கள்? எதிர்கால அரசியல் சதுரங்கம் எப்படி அமையும்? என்ற எண்ணத்தால் எடப்பாடி பழனிசாமி கழுவும் மீனில் நழுவும் மீனை போல் இதெல்லாம் புராணம் படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். எனக்கு தெரியாது என்று நழுவி இருக்கிறார்.
அவர் இப்படி கவர்னருக்கு எதிராக கருத்து சொல்லாததை தி.மு.க. கெட்டியாக பிடித்துக்கொண்டது. ஏற்கனவே அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி முறிவு நாடகம் என்று விமர்சித்து வரும் நிலையில் சித்தாந்த ரீதியான மோதலில் கவர்னருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கருத்து சொல்லாததை தி.மு.க. போட்டு வரும் ஸ்கெட்சில் எடப்பாடி பழனிசாமி சிக்கி வருவதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். மக்கள் என்ன கருதுகிறார்களோ?