தமிழ்நாடு (Tamil Nadu)

விமான சாகச நிகழ்ச்சி... நிர்வாக சீர்கேடு என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

Published On 2024-10-06 16:21 GMT   |   Update On 2024-10-06 16:21 GMT
  • போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவல்துறை இல்லாததால் மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கினர்.
  • குடிநீர் கிடைக்காத நிலையில் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனைகளில் அனுமதி

இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு 21 வருடங்கள் கழித்து மீண்டும் சென்னையில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சியை லட்சக்கணக்கில் கண்டுகளித்தனர்.

இந்நிலையில் விமான சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்த மக்கள் மீண்டும் வீடு திரும்பும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை விமான சாகச நிகழ்ச்சியை விமர்சித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான இந்திய விமானப் படையின் 92வது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் வண்ணம் சென்னையில் இன்று வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது.

இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடக் கூடுவர் என்பது அறிந்து, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும், இன்றைய நிகழ்ச்சியில் நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும்- போக்குவரத்தையும்

ஒழுங்கு படுத்துவதற்கு காவல்துறையினரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, மேலும் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும்.

இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகச் சீர்கேடே உருவான விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ராணுவ விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் இதுவரையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன,ஆனால் இன்று தமிழகத்தில் நிகழ்பெற்ற நிகழ்வில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது.

இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய இந்த மு.க.ஸ்டாலின் அரசுக்கு அரசுக்கு என் கடும் கண்டனங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News