தமிழ்நாடு (Tamil Nadu)

நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது: மு.க. ஸ்டாலின் கடிதம்

Published On 2024-06-05 09:33 GMT   |   Update On 2024-06-05 09:33 GMT
  • சர்வாதிகாரத்தனமான ஒற்றையாட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
  • நாற்பதுக்கு நாற்பது என்ற இந்த வெற்றி இந்திய அரசியலின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 2004-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது முழுமையான வெற்றி கண்டுள்ளது. இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் முக ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.

இந்த நிலையில் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சர்வாதிகாரத்தனமான ஒற்றையாட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ஆன்மிக நம்பிக்கைகளை அரசியல் சுயலாபத்துக்குப் பயன்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளை, கோவில் கட்டிய மண்ணிலேயே வீழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் இறைநம்பிக்கையுள்ள வாக்காளர்கள்.

சிறுபான்மை மக்களின் நெஞ்சில் இருந்த அச்ச உணர்வு நீங்கியிருக்கிறது. தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் நமது கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் நம்பிக்கைத் துளிர்கள் அரும்பியுள்ளன. அரசியலமைப்பு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்கின்ற வகையில், நாட்டை வழி நடத்தும் பணியை இந்தியா கூட்டணி மேற்கொள்ளும்.

அதற்கு நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றி பெருந்துணையாக இருக்கும். இந்த வெற்றிக்குத் துணை நின்ற உடன்பிறப்புகள் அனைவருக்கும் என நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். தோழமைக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

மதவாதத்தையும் வெறுப்பரசியலையும் விதைக்க நினைப்பர்கள் தமிழ்நாட்டில் எப்படியாவது கால் ஊன்றி விட வேண்டும் எனத் திட்டமிட்டார்கள்.

நாட்டின் பிரதமர் 8 முறை தமிழ்நாட்டுக்கு வந்தார். திமுக மீது அவதூறு சேற்றினை அள்ளி வீசினார். திமுக வெறுப்புப் பிரசாரம் செய்யவில்லை. பொறுப்பான முறையிலே தேர்தல் களத்தில் தன் கடமையை ஆற்றியது.

நாற்பதுக்கு நாற்பது என்ற இந்த வெற்றி இந்திய அரசியலின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என்பதைத்தான் தனிப்பெரும்பான்மை பெரும்பான்மையை பெற முடியாத பாஜக-வின் சரிவு காட்டுகிறது.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News