தமிழ்நாடு (Tamil Nadu)

நாகையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Published On 2024-09-12 05:16 GMT   |   Update On 2024-09-12 05:16 GMT
  • பொருட்கள் கடலில் மூழ்கி நாசமானதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
  • 1500 க்கு மேற்பட்ட படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம், செருதூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தர்மன் (வயது 55) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (40), தேவராஜ் (32), செருதூர் மெயின் ரோட்டை சேர்ந்த கார்த்திகேயன் (46), தெற்கு தெருவை சேர்ந்த சதீஷ் (36) ஆகிய 4 மீனவர்களும் கடந்த 9-ந்தேதி காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

தொடர்ந்து, அவர்கள் நேற்று முன்தினம் மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 5 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு ஒரு கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், அவர்களது கப்பலை கொண்டு தமிழக மீனவர்களின் பைபர் படகில் மோதியதுடன், மீனவர்களை தாக்கி விட்டு சென்றுவிட்டனர்.

இதனால் பைபர் படகு நிலைகுலைந்து கடலில் தலைகுப்புற கவிழ்ந்தது. படகில் இருந்த மீனவர்கள் கடலில் மூழ்கி தத்தளித்தனர். பின்னர் மற்ற மீனவர்களின் படகின் மூலம் கரைக்கு வந்தனர். அவர்களது படகும் மீட்கப்பட்டது. இதில் சுமார் ரூ.6½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் கடலில் மூழ்கி நாசமானதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்நிலையில் மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் மீனவ கிராமத்தில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று 2-வது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அதனால் 15 ஆயிரம் குடும்பங்கள் வருமானம் இல்லாமல் தவிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் 1500 க்கு மேற்பட்ட படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. இலங்கை கடற்படை தாக்குதல் தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி செருதூர் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News