தமிழ்நாடு

ரூ.100 கோடி நிலமோசடி வழக்கு- முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது

Published On 2024-09-02 10:33 GMT   |   Update On 2024-09-02 10:33 GMT
  • எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு.
  • முன் ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளதாக கூறி, வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் கரூர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் அவரது சகோதரர் சேகர் முன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல் துறையினர் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில், தங்களிடம் விசாரணை நடத்த எந்த அவசியமும் இல்லை என்பதால் முன் ஜாமின் வழங்க வேண்டும் என கோரி இருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.ஆர். விஜயபாஸ்கர் சகோதரருக்கு முன்பு ஜாமின் வழங்கக் கூடாது என்றும், அவருக்கு முன் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் காவல்துறை தரப்பு வழக்கறிஞர் உதயகுமார் எதிர்ப்பு தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாரின் சகோதரர் சேகர், செல்வராஜ் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்ய்பப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News