தமிழ்நாடு (Tamil Nadu)

சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் சுவர் சேதமாகி இருப்பதை காணலாம்.

கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் சுவர் இடிந்து விழுந்தது

Published On 2024-10-03 07:32 GMT   |   Update On 2024-10-03 07:32 GMT
  • இசக்கியம்மாள் தண்ணீர் பிடிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார்.
  • சிலிண்டர் வெடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை:

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள கீழச்செழியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (70). விவசாயி. இவரது மனைவி விஜயா (60). இவர்களுக்கு இசக்கியம்மாள் (28), சுடலை மணி (20) உள்ளிட்ட 9 மகன், மகள் உள்ளனர்.

இசக்கியம்மாள் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். அவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ள நிலையில் அவரது கணவர் அவர்களை விட்டு சென்று விட்டார்.

இதனால் இசக்கியம்மாள் தனது குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டின் அருகிலேயே வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இசக்கியம்மாள் வீட்டில் உள்ள கியாஸ் அடுப்பில் சமையல் செய்துள்ளார்.

அவரது குழந்தைகள் பக்கத்தில் உள்ள தாத்தா கணபதி வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனிடையே இசக்கியம்மாள் தண்ணீர் பிடிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார்.

அப்போது சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. அதே போல் மற்ற சுவர்களும் விரிசல் ஏற்பட்டு மேற்கூரையும் பலத்த சேதம் அடைந்தது.

இந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கியாஸ் அடுப்பில் கசிவு ஏற்பட்டு அதனால் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின்போது இசக்கியம்மாள் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் சிலிண்டர் வெடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News