தமிழ்நாடு

பூரண மதுவிலக்கை அமல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2024-09-18 06:49 GMT   |   Update On 2024-09-18 06:49 GMT
  • இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மத்திய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகிறது. பல ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மது கடைகளை படிப்படியாக மூடுவதற்கான சரியான தருணமாகும். மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மதுவில்லா தமிழகத்தை செயல்படுத்த வேண்டும் என்று 2015-ம் ஆண்டு எனது தலைமையில் ஒரு கோடி கையெழுத்து பெற பட்டது. அதை நான் தற்போது நினைவு கூற விரும்புகிறேன். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு அதிகரித்து வருகிறது. இதற்கு டாஸ்மார்க், போதை பொருட்கள் முக்கிய காரணமாக இருக்கிறது.

மக்கள் அரசு மீது நம்பிக்கை இழந்து உள்ளனர். டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடும் விதத்தில் அக்டோபர் 2-ந்தேதி முதல் அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். போதைப் பழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

நிபா வைரஸ் கேரளாவில் அதிகரித்து வருகிறது. கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை தடுக்க தமிழக சுகாதாரத்துறையும் குமரி மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கிராமங்கள், நகரங்களில் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்தில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமவள கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். போதை பொருள் பழக்கத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். பள்ளி- கல்லூரி மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு நன்னெறி வகுப்புகள் அவசியமாகும். போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துனர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஏப்ரல், மே மாதத்தில் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தப்படும் என்று தெரிகிறது. சொத்து வரியை உயர்த்துவதால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை கைவிட வேண்டும்.

முதல்வரின் வெளிநாட்டு பயணம் ஆக்கபூர்வமான பயணமா என்பது கேள்விக்குறி தான். நம்மைவிட சிறிய மாநிலங்களானான கர்நாடகா, தெலுங்கானா முதல்வர்கள் வெளிநாட்டு பயணத்தின் முலம் அதிக முதலீடுகளை பெற்று வந்துள்ளனர். மீனவர்கள் அச்சமின்றி கடலுக்கு சென்று மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகிறது. பல ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காப்பீடு திட்டம், வீடு கட்டும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவது பாராட்டுதலுக்குரியதாகும். த.மா.கா. உறுப்பினர் சேர்க்கை பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 1-ந்தேதி முதல் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அக்டோபர் 15-ந்தேதி வரை இந்த பணி நடைபெறும். மாவட்ட, மாநில நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கை பணியை முடித்து அக்டோபர் 20-ந் தேதிக்குள் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இந்த உறுப்பினர் சேர்க்கை 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு வலுசேர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.

த.மா.கா. உறுப்பினரின் குரலும் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது மாநில அரசு தான். மத்திய அரசு என்று ஏமாற்றக்கூடாது. பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறிவிட்டு தற்பொழுது மதுக்கடைகளை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு வருகின்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் தான் என்கவுண்டர் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தென் மாநிலங்களிலேயே அதிக அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பது தமிழகத்தில் தான் என்பது வேதனையான செயலாகும்.

தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வாக்காளர்களை ஏமாற்றி வருகிறார்கள்.



தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தது பற்றி கேட்கிறீர்கள். புதிய கட்சிகளாக இருந்தாலும் சரி பழைய கட்சிகளாக இருந்தாலும் சரி மக்கள் அதன் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பழைய கட்சிகளாக இருந்தாலும் புதிய கட்சிகளாக இருந்தாலும் அதன் செயல்பாடுகளை பொருத்தே வரும் காலங்களில் மக்கள் வாக்களிப்பார்கள்.

விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடக்கிறது. மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களை அழைத்து மாநாடு நடத்துவது ஆச்சரியமாக உள்ளது. புதிராக உள்ளது. எல்லா கட்சிகளுக்குமே கூட்டணி மற்றும் ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதை வெளிப்படையாக கூற தயங்குகிறார்கள். அது கூட்டணி கட்சியின் மீது உள்ள மரியாதையா, பயமா என்று தெரியவில்லை. கோவையில் நடந்த ஜி.எஸ்.டி. மாநாட்டில் நிதி மந்திரி, தொழில் அதிபர்கள், வியாபாரிகளை அழைத்து கருத்துக்களை கேட்டார்.

அந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான அரசியல் செய்ய வேண்டுமே தவிர காழ்ப்புணர்ச்சியுடன் அரசியல் செய்யக்கூடாது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடுசெய்து வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் எந்தெந்த மாநிலங்களில் செய்யப்பட்டுள்ளது. அந்த திட்டங்களுக்கு மத்திய அரசு சரியாக நிதி வழங்கி வருகிறது. நிறைவேற்றாத திட்டங்களுக்கு தான் நிதி வழங்கவில்லை. மத்திய அரசின் சார்பில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு நிதி வழங்கவில்லை என்று கூறினால் நானே டெல்லியில் மத்திய அரசை வலியுறுத்த தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News