தமிழ்நாடு

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற கூடாது- ஐகோர்ட் மதுரை கிளை

Published On 2024-06-19 06:44 GMT   |   Update On 2024-06-19 08:17 GMT
  • பெரும்பாலான தொழிலாளர்களுக்கு நிலமும் இல்லை, சொந்த வீடும் இல்லை.
  • எங்கள் பிள்ளைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்.

மதுரை:

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா மாஞ்சோலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த அமுதா, ஸ்டாலின் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மாஞ்சோலை மலைப்பகுதியில் உள்ள 8,374 ஏக்கர் நிலத்தை 99 வருட குத்தகைக்கு சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து 1928-ம் ஆண்டு தனியார் நிறுவனம் பெற்றது. மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் 700 குடும்பத்தினர் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தோம். 2028-ம் ஆண்டில் குத்தகை முடிகிறது.

ஆனால் 4 ஆண்டுகள் முன்னதாகவே தனியார் நிறுவன குத்தகை ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதால் எங்களை அங்கிருந்து காலி செய்யுமாறு தெரிவித்தனர். பல தலைமுறைகளாக தேயிலை தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றிய எங்களை திடீரென காலி செய்யுறுமாறு கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எங்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தொகை வழங்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.

பெரும்பாலான தொழிலாளர்களுக்கு நிலமும் இல்லை, சொந்த வீடும் இல்லை. மாஞ்சோலை எஸ்டேட் முகவரியில் மட்டுமே ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளதால், அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. இதனால் 700 குடும்பங்களை சேர்ந்த 2,150 பேர் வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறோம்.

எனவே எங்களுக்கு தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு வழங்கவும், கன்னியாகுமரி ரப்பர் தோட்ட கழகத்தில் வேலை வழங்கவும் வேண்டும். அதேபோல அங்கன்வாடி, பள்ளிகளில் சமையல் உதவியாளர், அலுவலக உதவியாளர் பணிகளை வழங்க வேண்டும். எங்கள் பிள்ளைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி மகா தேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் லஜபதிராய், வக்கீல் பினேகாஸ் ஆஜராகி, ஊட்டியில் புலிகள் காப்பகத்துக்காக தேயிலை தோட்ட தொழிலாளர்களை காலி செய்யும் நடவடிக்கையின்போது வனத்துறை சார்பிலும் இழப்பீடு வழங்கப்பட்டது. அதுபோல மாஞ்சோலையையும் புலிகள் காப்பகத்துக்காக கையகப்படுத்தப்படுவதால், அங்குள்ள தொழிலாளர்களுக்கும் வனத்துறை இழப்பீடு வழங்க வேண்டும் என வாதாடினர்.

மேலும், மனுதாரர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை மாநில அரசு செய்து தருவது அவசியம் எனவும் கோரினர். இதை பதிவு செய்து கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு உள்ளிட்ட மறுவாழ்வு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரும் வரை மாஞ்சோலையில் இருந்து அவர்களை வெளியேற்ற தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கு நாளை மறுநாள் ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

Tags:    

Similar News