தமிழ்நாடு

கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு - கோத்தகிரி ஊராட்சி தலைவருக்கு அனுமதி

Published On 2024-06-07 11:20 GMT   |   Update On 2024-06-07 11:20 GMT
  • கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன் தோஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
  • கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வின்போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய, கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில், அனுமதியின்றி கட்டடம் கட்டுப்பட்டுள்ளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும், விதிகளை மீறிய கட்டடத்தை இடிக்க வேண்டும் என கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன் தோஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதனை எதிர்த்து கொடநாடு எஸ்டேட் மேலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கொடநாடு எஸ்டேட்டில் எந்த விதி மீறலும் இல்லை எனக்கூறி கோத்தகிரி பஞ்சாயத்து தலைவர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து கடந்த 2008 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து கொடநாடு பஞ்சாய்த்து தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது.


இந்த மேல் முறையீட்டு மனு நீதிபரிகள் அமர்வில் இன்று இறுதி விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர், சொத்து வரி விதிப்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மட்டுமே கொடநாடு எஸ்டேட்டுக்குள் நுழைய அனுமதி கேட்பதாகவும், 2008 ஆம் ஆண்டிலிருந்து கொடநாடு எஸ்டேட்டுக்குள் யாரும் உள்ளே நுழைய முடியாத நிலை இருப்பதாகவும், கூடுதல் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டிருந்தால் என்ன செய்வது? எனவும் ஆய்வு செய்தால் தானே அது தெரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 2023 ஆம் ஆண்டு வரை சொத்து வரி செலுத்தப்பட்டுதாகக் கூறி, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும், கொடநாடு எஸ்டேட்டுக்குள் விதிகளை மீறி எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளவில்லை என தனி நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆய்வு செய்தால் தானே விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறதா? என தெரியவரும் அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து கொடநாடு எஸ்டேட்டில் கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆய்வின்போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News