தமிழ்நாடு

இணையதளத்தில் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்த கருணாநிதி நினைவு நாணயங்கள்

Published On 2024-09-19 02:28 GMT   |   Update On 2024-09-19 02:28 GMT
  • மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், நாணயத்தை வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்று கொண்டார்.
  • தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் போட்டா போட்டி கொண்டு வாங்கினர்.

சென்னை:

நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்கள், அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாக்கள், நாட்டின் முக்கிய நிகழ்வுகள், மிகப்பெரும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மத்திய அரசு சிறப்பு நினைவு நாணயங்களை வெளியிட்டு கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக திருவள்ளுவர், காமராஜர், அண்ணா, சி.சுப்பிரமணியம், தஞ்சை பெரிய கோவில், எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.ஜி.ஆர். ஆகியோருக்கு நாணயங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவருக்கு மத்திய அரசு கடந்த மாதம் 18-ந் தேதி 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு கவுரவப்படுத்தியது.

அதற்கான விழா சென்னையில் நடந்தது. மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், நாணயத்தை வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்று கொண்டார்.

இது நினைவு நாணயம் என்பதால் புழக்கத்தில் விடப்படாது. ஆனால் அறிவாலயத்தில் இந்த நாணயம் ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றதால் அது விரைவில் தீர்ந்து போனது.

இந்த நிலையில் மத்திய அரசின் https://www.spmcil.com/en/ என்ற இணையதளத்தில் நூற்றாண்டு நினைவு நாணயம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் போட்டா போட்டி கொண்டு வாங்கினர். அதனால் அவை அனைத்தும் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்துவிட்டன.

மொத்தம் 1,500 நாணயங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும், ஆனால் அவை உடனே விற்றுத் தீர்ந்து விட்டதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். அடுத்த வாரம் இந்த கருணாநிதி நினைவு நாணயங்களை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர உள்ளதாகவும் கூறினார். அந்த இணையதளத்தில் ஒரு 100 ரூபாய் நாணயம் ரூ.4,180 மற்றும் ரூ.4,470 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

Tags:    

Similar News