தமிழ்நாடு

கொடநாடு வழக்கு- கனகராஜ் சகோதரர் உள்பட 2 பேருக்கு ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம்

Published On 2022-07-27 08:23 GMT   |   Update On 2022-07-27 10:04 GMT
  • ஊட்டியில் தங்குவதால் தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளது என கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
  • நீலகிரி நீதிமன்ற அனுமதி இல்லாமல் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கூடாது எனவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை:

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை நடந்தது. இதனை தடுக்க வந்த காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது இந்த வழக்கில் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான 5 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விபத்தில் இறந்த கனகராஜின் மரணம் தொடர்பாக சாட்சியங்களை கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் நிபந்தனை ஜாமீனில் உள்ளனர்.

இவர்கள் 2 பேரும் ஊட்டியில் தங்கியிருந்து திங்கட்கிழமை தோறும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஊட்டியில் தங்குவதால் தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளது என கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தனபால், ரமேஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதன்படி தனபால், ரமேஷ் ஆகிய 2 பேரும் வாரந்தோறும் திங்கட்கிழமை கையெழுத்து இடுவதற்கு பதிலாக, மாதந்தோறும் 1 மற்றும் 15-ந் தேதிகளில் சோலூர் மட்டம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மேலும் நீலகிரி நீதிமன்ற அனுமதி இல்லாமல் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கூடாது எனவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Tags:    

Similar News