தமிழ்நாடு (Tamil Nadu)

சுற்றுலா அழைத்து சென்று மாணவி பலாத்காரம்

Published On 2024-10-17 04:21 GMT   |   Update On 2024-10-17 04:21 GMT
  • மாணவிக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (22), இவர் சேலம் டவுன் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். வீரமணி 16 வயதான பிளஸ்-1 மாணவியை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவி வீட்டில் இருந்தவர்களிடம் பள்ளிக்கு சென்று வருவதாக கூறி விட்டு வெளியில் சென்றார். அப்போது அந்த மாணவியை வீரமணி தனது மோட்டார் சைக்கிளில் கொல்லி மலைக்கு சுற்றுலா அழைத்து சென்றார். அவருடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வீரமணியின் நண்பர்களான கல்லூரி மாணவர்கள் கவியரசன் (20), அக்பர் (20) ஆகியோரும் சென்றனர்.

பின்னர் அங்கு அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று சுற்றி பார்த்தனர். தொடர்ந்து கொல்லி மலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து அந்த மாணவியுடன் வீரமணி தங்கினார். பின்னர் அந்த மாணவியை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து வீட்டில் இறக்கி விட்டு சென்றார்.

இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது அவர்களிடம் வீரமணி தன்னை கொல்லிமலைக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் கலைவாணி மாணவியை கொல்லிமலைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பலாத்காரம் செய்த வீரமணி மற்றும் உடந்தையாக இருந்த கவியரசன், அக்பர் ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். பின்னர் 3 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மாணவிக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News