மாமல்லபுரத்தில் காட்சி பொருளான பேட்டரி வாகனம்
- சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
- எந்திரமும் பயன்படுத்தப்படாமல் முடங்கி ஓரங்கட்டப்பட்டு கிடக்கிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் சிறப்பு பெற்றது. இதனை ரசிப்பதற்காக தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாட்டினர் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.
புராதன சின்னங்களை சுற்றி பார்க்க வரும் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், மாற்று திறனாளிகளின் வசதிக்காக தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட பேட்டரி வாகனம் கடற்கரை கோவில் வளாகத்தில் இயங்கி வந்தது.
தற்போது இந்த வாகனம் பழுதடைந்து அங்குள்ள வளாகத்தில் பலமாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு
உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
இதேபோல் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதற்காக பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கி தூளாக்கும் எந்திரம் ஒன்றும் அந்த பகுதியில் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த எந்திரமும் பயன்படுத்தப்படாமல் முடங்கி ஓரங்கட்டப்பட்டு கிடக்கிறது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றகோரிக்கை எழுந்து உள்ளது.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, பொது நிறுவனங்கள் அதன் சமூக பொறுப்பு நிதியில் பல லட்சம் ரூபாய் செலவில், வாங்கி கொடுக்கும் பொருட்களை தொல்லியல்துறை முறையாக பராமரித்து பயன் படுத்துவது இல்லை. இதனை தொண்டு நிறுவனங்களும் கண்டு கொள்வதில்லை.
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் பேட்டரி வாகனம் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை தூளாக்கும் எந்திரத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.