தமிழ்நாடு

சென்னை திரும்பினார்.. போலீஸ் பிடியில் மகாவிஷ்ணு.. ரகசிய இடத்தில் வைத்து விசாரணை.. விரைவில் கைது

Published On 2024-09-07 08:56 GMT   |   Update On 2024-09-07 10:15 GMT
  • மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்
  • ஆஸ்திரேலியாவிலிருந்து அவர் சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்துள்ளார்

சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் என்கிற அமைப்பைச் சேர்ந்த மகா விஷ்ணு என்கிற சொற்பொழிவாளர் மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.

கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்த நிலையில் இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

சைதாப்பேட்டை மற்றும் திருவொற்றியூர் போலீஸ் நிலையங்களிலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ளதாகவும் சர்ச்சை குறித்து விரைவில் விளக்கம் அளிப்பார் என்றும் அவரது அறக்கட்டளை சார்பில் கூறப்பட்டது. தான் எங்கும் ஓடி விடவில்லை என்று அவர் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிலிருந்து அவர் சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்துள்ளார். அவரை விமான நிலையத்திலிருந்து தமிழக போலீசார் அழைத்துச்சென்றுள்ளனர். மேலும் ரகசிய இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் மீது அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார். 

Tags:    

Similar News