தமிழ்நாடு

பாபநாசம் அணை நீர்மட்டம் 120 அடியை தாண்டியது- விவசாய பணிகள் தீவிரம்

Published On 2024-07-31 04:17 GMT   |   Update On 2024-07-31 04:17 GMT
  • சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 127 அடியை கடந்த நிலையில் இன்று 2 ½ அடி உயர்ந்து 130 அடியை நெருங்கிவிட்டது.
  • தென்காசி மாவட்டத்தில் கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 1.5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வழக்கத்தை விட இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைவாகவே பெய்திருந்த நிலையிலும், மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக இருந்தது. இதனால் அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் கடந்த ஆண்டை காட்டிலும் 2 மடங்கு அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் 2 நாட்களாக கனமழை பெய்ததால் சுமார் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. ஆனால் நேற்று பிற்பகலில் இருந்து மழை பெய்யவில்லை. இதனால் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,940 கனஅடி நீர் அந்த அணைக்கு வருகிறது. 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 1 அடி உயர்ந்து 120.10 அடியை எட்டியுள்ளது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 127 அடியை கடந்த நிலையில் இன்று 2 ½ அடி உயர்ந்து 130 அடியை நெருங்கிவிட்டது. இந்த அணைகளில் இருந்து பாசனத்திற்காக 1154 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கொடுமுடியாறு அணைப்பகுதியில் மட்டும் நேற்று மதியம் தொடங்கி இன்று காலை வரையிலும் 11 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 52.50 அடி கொண்ட அந்த அணை நீர்மட்டம் 27 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 47 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 1.5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 182 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் அணை நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 77 அடியானது. ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 82 அடியானது.

குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழியும் நிலையில், அடவிநயினார் அணை பகுதியில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்தது. அந்த அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் மேலும் 4 அடி உயர்ந்து 117 அடியை எட்டியுள்ளது.

மாவட்டம் முழுவதும் இதமான காற்று வீசி வருகிறது. குளங்களுக்கு நீர்வரத்து காரணமாக மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News