தமிழ்நாடு (Tamil Nadu)

தண்டவாளத்தில் பிணமாக கிடந்த பா.ம.க. மகளிர் அணி நிர்வாகி- சாவில் மர்மம் இருப்பதாக தாய் போலீசில் புகார்

Published On 2023-03-04 05:20 GMT   |   Update On 2023-03-04 05:20 GMT
  • மாரியம்மாள் குருவிகுளம் யூனியன் பா.ம.க. மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தார்.
  • புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி சண்முகத்தாய் (வயது 70). இவர்களது மகள் மாரியம்மாள்.

மாரியம்மாள் குருவிகுளம் யூனியன் பா.ம.க. மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தார். இவர் தன் கணவரை விட்டு பிரிந்து ரெங்கசமுத்திரத்தில் தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று காலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்தபோது மாரியம்மாள் வீடு பூட்டி இருந்தது. மேலும் அவரை காணவில்லை. இதனால் அவரது தாய்க்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே சங்கரன்கோவில் இலவன்குளம் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக தாலுகா போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்தது மாரியம்மாள் என்பது உறுதியானது. மேலும் அவரது உடல் அருகே அவரது மொபட்டும் நின்றது. இதையடுத்து மாரியம்மாள் சாவில் மர்மம் இருப்பதாக சண்முகத்தாய் சங்கரன்கோவில் தாலுகா போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News