தமிழ்நாடு (Tamil Nadu)

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் புடவை வைத்து பூஜை

Published On 2024-09-28 02:01 GMT   |   Update On 2024-09-28 02:01 GMT
  • கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி முதல் 2 இளநீர் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
  • சிவன்மலை முருகனிடம் பூப்போட்டு கேட்டு ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்றுமுன்தினம் முதல் புடவை வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.

காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. இந்த கோவிலின் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி வேறு எந்த கோவிலிலும் இல்லாத தனிச்சிறப்பாகும். நாட்டில் ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், இக்கோவிலின் மூலவருக்கு கருணாமூர்த்தி என்ற பெயர் உள்ளது.

சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து குறிப்பிட்ட பொருளை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்ய கூறுவார். அந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சாமியிடம் அர்ச்சகர்கள் பூப்போட்டு உத்தரவு கேட்பர். சாமி உத்தரவு கொடுத்தால் அதன் பின்பு உத்தரவு பொருள் மாற்றி வைக்கப்பட்டு பூஜை நடக்கும்.

உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி முதல் 2 இளநீர் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், வீரணம் கிராமம் சிவக்குமார் (வயது 30) என்ற பக்தரின் கனவில் சிவப்பு நிற புடவை வைக்க உத்தரவானது. இதையடுத்து சிவன்மலை முருகனிடம் பூப்போட்டு கேட்டு ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்றுமுன்தினம் முதல் புடவை வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஜவுளி விலை, ஜவுளி உற்பத்தியில் மாற்றம் வரும் எனவும், இதன் தாக்கம் போக, போகத்தான் தெரியவரும் என கோவில் சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News