தமிழ்நாடு

பாரம்பரிய முறைப்படி 15 மாட்டு வண்டிகளில் சீர் கொடுத்து அசத்திய தாய்மாமன்கள்

Published On 2023-05-01 05:51 GMT   |   Update On 2023-05-01 05:51 GMT
  • விசேஷ நிகழ்ச்சிகளில் எவ்வளவு பெரிய மொய் பணம் கிடைத்தாலும் தாய்மாமன் சீருக்கே முதல் மரியாதை கொடுக்கப்படுகிறது.
  • சீர்வரிசையை திண்டுக்கல்-பழனி சாலையில் மேளதாளங்கள், தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கையுடன் கொண்டு வந்தனர்.

திண்டுக்கல்:

திருமணம், காதணி விழா, புனித நீராட்டு விழா உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளில் தாய்மாமன் சீர் கொடுப்பது என்பது தென் மாவட்டங்களில் பாரம்பரிய முறைப்படி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாகரிகம் வளர்ந்த காலத்திலும் இதுபோன்ற சீர்கொடுக்கும் முறை பழமை மாறாமல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

விசேஷ நிகழ்ச்சிகளில் எவ்வளவு பெரிய மொய் பணம் கிடைத்தாலும் தாய்மாமன் சீருக்கே முதல் மரியாதை கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்த தேனீர் கடை உரிமையாளர் ஜெயபால் தனது மகள் ரம்யாவுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்தினார்.

தனியார் மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் ரம்யாவின் தாய்மாமன் பெருமாள் மற்றும் அவரது தம்பிகள் தனது அக்கா மகளுக்கு செய்ய வேண்டிய சீர்வரிசைகளான பட்டுச்சேலை, தங்க நகை, பழங்கள், அரிசி மூட்டை, ஆடு, பலசரக்கு சாமான்கள், பித்தளை, சில்வர் பாத்திரங்கள், பூமாலை, கேக் வகைகள், இனிப்பு உள்ளிட்ட பொருட்களை 15 மாட்டு வண்டிகளில் வைத்து ஊர்வலமாக திண்டுக்கல்-பழனி சாலையில் மேளதாளங்கள், தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கையுடன் கொண்டு வந்தனர்.

இதனை திருமண மண்டபத்துக்கு வந்திருந்த உறவினர்களும், பொதுமக்களும் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். தாய்மாமன்களுக்கு செய்ய வேண்டிய மரியாதையை கொடுத்து சீர்வரிசையை ரம்யாவின் பெற்றோர்கள் பெற்றுக் கொண்டனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News