தமிழ்நாடு

எச்.ராஜாவை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்- செல்வப்பெருந்தகை அறிவிப்பு

Published On 2024-09-16 08:45 GMT   |   Update On 2024-09-16 08:45 GMT
  • சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்,
  • ராகுல்காந்தியை தேசத்துரோகி என்று குற்றம் சாட்டியதை வன்மையாக கண்டிக்கிறேன்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தனியார் தொலைக் காட்சிக்கு பேட்டியளித்த தமிழ்நாடு பா.ஜ.க.வின் தற்காலிக பொறுப்பாளர் எச். ராஜா மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்க சுற்றுப்பயணத்தில் நிகழ்த்திய சந்திப்பை குறிப்பிட்டு மிகமிக இழிவாக தரம் தாழ்ந்து பேசியதை தமிழ் நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த சந்திப்பு குறித்து பேசும் போது, தலைவர் ராகுல்காந்தியை தேசத்துரோகி என்று குற்றம் சாட்டியதை வன்மையாக கண்டிக்கிறேன். யாரை பார்த்து யார் தேசத்துரோகி என்று கூறுவது ?

அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பை எச். ராஜா கொச்சைப்படுத்தி பேசுவது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் விரோதமாக கருத்துகளை கூறுவது வகுப்புவாத விஷமத்தனமான கருத்துகளை பரப்புவது, மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் எச். ராஜாவின் பேச்சை கண்டித்து அனைத்து மாவட்ட தலை நகரங்களில் மாவட்டத் தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமும், ஒப்பற்ற தலைவருமான ராகுல் காந்தியை இழித்து பேசுவதை எவரும் அனுமதிக்க முடியாது. இத்தகைய அநாகரீகமான வகையில் பேசியிருக்கிற எச். ராஜாவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிற வகையில் தமிழகம் முழுவதும் நாளை (17.09.2024) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News