தமிழ்நாடு

ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு- வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார்

Published On 2023-03-16 06:16 GMT   |   Update On 2023-03-16 06:16 GMT
  • இலங்கை கடற்படையின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக இன்று காலை 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரம் துறைமுகத்துக்கு திரும்பினர்.
  • ஒவ்வொரு முறையும் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி விரட்டியடிப்பது நடந்து வருகிறது.

ராமேசுவரம்:

ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். இவர்களில் ஒரு தரப்பினர் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது வழக்கம்போல் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் பகுதியான இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை. எனவே இங்கிருந்து புறப்பட்டு செல்லுங்கள் என எச்சரித்தனர். சில வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி தாக்கி விரட்டியடித்ததாக தெரிகிறது. தொடர்ந்து இந்த பகுதியில் மீன் பிடித்தால் விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்படுவீர்கள் என இலங்கை கடற்படை எச்சரித்தது.

இதனால் பீதி அடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதியிலேயே அவசர அவசரமாக கரைக்கு புறப்பட்டனர். இவ்வாறு அவசர கதியில் திரும்பும்போது மீனவர்களின் படகுகள் ஒன்றொடு ஒன்று மோதி சேதமடைந்தன.

இலங்கை கடற்படையின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக இன்று காலை 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரம் துறைமுகத்துக்கு திரும்பினர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி விரட்டியடிப்பது நடந்து வருகிறது. இதன் காரணமாக எங்களுக்கு ஒவ்வொரு படகுகளுக்கும் ரூ.1 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது.

இந்த போக்கு நீடித்தால் ராமேசுவரத்தில் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News