குன்னூரில் சுற்றுலாப் பயணிகளை கவரும் ரெட் லீப் மலர்கள்
- செடிகளில் உள்ள இலைகள் மலர்கள் போல் நிறம் மாறி மாறி காட்சி அளிக்கின்றது.
- சிவப்பு நிறத்தில் மலர்களைப் போல் காட்சியளிக்கும் இந்த ரெட் லீப் மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது பழமை வாய்ந்த பங்களாக்களை கட்டியதுடன் அரிய வகையான மரங்களும், மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டது.
இவை அனைத்தும் தற்போது வரை மலை மாவட்டத்தின் அழகினை மேலும் மெருகூட்டி வருகிறது. இதில் ஒரு பகுதியாக குன்னூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ரெட் லீப் மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது,
தற்போத இந்த செடிகளில் உள்ள இலைகள் மலர்கள் போல் நிறம் மாறி மாறி காட்சி அளிக்கின்றது. ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தச் செடிகள் மலைப்பாதை ஓரங்களிலும் பங்களா மற்றும் தனியார் எஸ்டேட் பகுதிகளிலும் நடவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் சாலை ஓரத்தில் பாதுகாப்பு வேலையாக இந்த செடிகளை பயன்படுத்தி வருகின்றனர். இவை பச்சை, மஞ்சள், சிவப்பு மற்றும் இளம் சிவப்பு ஆகிய வண்ணங்களில் அவ்வப்போது நிறம் மாறி காட்சி தரும் தன்மை உள்ளது. தற்போது சிவப்பு நிறத்தில் மலர்களைப் போல் காட்சியளிக்கும் இந்த ரெட் லீப் மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். இது மட்டும் அல்லாமல் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நாளை முதல் 2 நாட்கள் நடைபெற உள்ளதால் இந்த மலர்களை அறுவடை செய்து வாகனங்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள், ஒர்க்ஷாப் உள்ளிட்டவைகளுக்கு பூஜைகளுக்காகவும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.