தமிழ்நாடு (Tamil Nadu)

திருச்சி மாவட்டத்தில் வெப்பம் தணித்த கனமழை

Published On 2024-10-05 06:51 GMT   |   Update On 2024-10-05 06:51 GMT
  • உப்பிலியபுரம் பகுதியில் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
  • மழையின் காரணமாக திருச்சியில் வெப்பம் தணிந்து குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

திருச்சி:

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் வருகிற 8ம் தேதி வரை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கோடைக்கு இணையான வெப்பதாக்குதலை மக்கள் சமாளித்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு ஆறுதலை அளித்தது. திருச்சியில் வெயில் வாட்டி வதைத்தது பின்னர் மாலையில் கரு மேகங்கள் திரண்டு ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. மாலை 6 மணி அளவில் திருச்சி மாநகர பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது.

திருச்சி மத்திய பஸ் நிலையம், ஜங்ஷன் ,தில்லை நகர், பொன்மலை, கொட்ட ப்பட்டு, விமான நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, காந்தி மார்க்கெட், மலை க்கோட்டை, உறையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒன்றரை மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. எதிர்பாராத இந்த மழையின் காரணமாக மார்க்கெட் மற்றும் வெளியிடங்களுக்கு சென்ற மக்கள் மழையில் நனைந்தபடி வீட்டுக்கு செல்ல நேரிட்டது.

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழை நீர் குளம் போல்தேங்கியது.

இடி மின்னல் காரணமாக திருச்சி மன்னார்புரம் சுப்பிரமணியபுரம் கொட்டப்பட்டு பொன்மலை உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது உப்பிலியபுரம் பகுதியில் பெய்த கனமழையால் புளியஞ்சோலை அய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது உப்பிலியபுரம் வெங்கடாசலபுரம் மாரடி ,கோட்டப்பாளையம், வைரிச்செட்டிப்பாளையம், பி மேட்டூர், புளியஞ்சோலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அய்யாற்றில் செந்தண்ணீர் கரைபுரண்டு ஓடியது மேலும் உப்பிலியபுரம் பகுதியில் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

இரண்டாம் குறுவைநெல் சாகுபடி அறுவடை தொடங்கியுள்ள நிலையில் இந்த மழையால் அறுவடை பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் நேற்று 719.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதில் அதிகபட்சமாக மணப்பாறை பகுதியில் 76.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு;-

கள்ளக்குடி 30.2, லால்குடி 49, நந்தியாறு அணைக்கட்டு 70, புள்ளம்பா டி 33.4 , தேவி மங்கலம் 7.2, சிறுகுடி 18.8 , வாத்தலை அணைக்கட்டு 4.2 ,பொன்னணியாறு அணை 35, கோவில்பட்டி 39.2, மருங்காபுரி 64.2 , முசிறி 16, புலிவலம் 8 , தாப்பேட்டை 10, நவலூர் கொட்டப்பட்டு 1, துவாக்குடி 17.2 ,கொப்பம்பட்டி 40, தென்பர நாடு 20, துறையூர் 25, பொன்மலை 44.2 , திருச்சி ஏர்போர்ட் 55, திருச்சி ஜங்ஷன் 36, திருச்சி டவுன் 19. திருச்சி மாவட்டத்தில் சராசரியாக 29.97 மி.மீ மழை அளவு பதிவாகி இருந்தது.

இந்த மழையின் காரணமாக திருச்சியில் வெப்பம் தணிந்து குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

Tags:    

Similar News