தமிழ்நாடு

"நாய் கூட பி.ஏ.பட்டம் வாங்கும்.."- சர்ச்சை பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம்

Published On 2024-07-03 11:19 GMT   |   Update On 2024-07-03 11:19 GMT
  • திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளானது.
  • நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது நம்ம ஊரில்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி சார்பில் நீட் எதிர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நீட் தேர்வை நடத்துவதில் தீவிரம் காட்டும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தின்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளானது.

அப்போது அவர் பேசியதாவது:-

நான் ஒரு வக்கீல். எழிலரசன் பி.இ., பி.எல்., இவையெல்லாம் எங்களுக்கு குலப் பெருமையால், கோத்திரப் பெருமையால் வந்தததா? இந்த இயக்கம் போட்ட பிச்சை என்பதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன்.

திராவிட இயக்கம் இல்லையென்றால், கம்யூனல் அரசாணை இல்லை என்று சொன்னால், இத்தனை பேர் டாக்டர் பட்டம் பெற்றிருக்க முடியாது.

நான் பட்டம் பெறும் காலத்தில் ஒருவர் பி.ஏ. பட்டம் பெற்றால், உடனடியாக ஒரு பெயின்ட்ரை அழைத்து பி.ஏ. என்று போர்டு எழுதி மாட்டுவார்கள். காரணம் என்னவென்றால், அந்த ஊரிலேயே ஒரே ஒரு பி.ஏ. தான் இருக்கும்.

ஆனால், இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது நம்ம ஊரில். ஆனால், யாராவது போர்டு மாட்டுகிறார்களா?

எனவே, இந்த வளர்ச்சிக்கு யார் காரணம் என்பதை மக்களை எண்ணிப் பார்க்க வேண்டும். அதை அழிப்பதற்காகத்தான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது" என்று பேசினார்.

ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதைதொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், "இந்தப் பேச்சு சர்ச்சையான நிலையில், "ஒரு காலத்தில், ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே கிடைத்த கல்வி, அனைவருக்கும் கிடைக்க காரணம் திராவிட இயக்கம்தான் என்பதே தனது பேச்சின் நோக்கம். மேலும், நாய்கூட பி.ஏ. பட்டம் பெறுகிறது என்பது உள்நோக்கத்துடன் சொல்லப்பட்ட கருத்து அல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News