தமிழ்நாடு (Tamil Nadu)

மகனை கொன்ற சோகத்தில் சிகிச்சையில் இருந்த தந்தையும் உயிரிழப்பு

Published On 2024-10-04 09:07 GMT   |   Update On 2024-10-04 09:07 GMT
  • தந்தை மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
  • மகனை கொன்று விட்ட சோகத்தில் இருந்த ராமசாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பொம்மைய நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 74). ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரியான இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.

இதில் 3-வது மகன் சுப்பிரமணிக்கு (34) மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அடிக்கடி மதுகுடிக்க பணம் கேட்டு தந்தை ராமசாமியை தொந்தரவு செய்து வந்துள்ளார். கடந்த 1-ந்தேதி சுப்பிரமணியன் வழக்கம்போல் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.

ஆனால் ராமசாமி தரமுடியாது என கண்டிப்புடன் தெரிவித்தார். இதனால் தந்தை மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுப்பிரமணி தந்தையை தாக்கினார். இதையடுத்து வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ராமசாமி மகனை சரமாரியாக வெட்டினார்.

இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

கைதான ராமசாமிக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தது. இதற்காக அவர் மருந்துகளை உட்கொண்டு வந்தார். மகனை கொன்று விட்ட சோகத்தில் இருந்த ராமசாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News