வீட்டிற்குள் படம் எடுத்து ஆடிய நல்ல பாம்புக்கு பால் வைத்த பெண்
- பாம்பை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த லட்சுமி பயத்தில் சத்தம் போட்டார்.
- வீட்டில் படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பை வெறும் வயிற்றுடன் அனுப்பக்கூடாது என்றும், அதற்கு பால் வைக்கும்படியும் கூறினர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் மூங்கில்குடி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 50). இவரது மனைவி லட்சுமி. நேற்று காலை லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது காபி போடுவதற்காக பிரிட்ஜில் உள்ள பாலை எடுக்க சென்றார். அப்போது பிரிட்ஜ் அருகே 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடியது.
பாம்பை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த லட்சுமி பயத்தில் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து பார்த்தனர்.
அப்போது வீட்டிற்குள் பாம்பு படம் எடுத்து ஆடுவதை பார்த்த சிலர், கார்த்திகை தினத்தில் நல்ல பாம்பு வீட்டில் படம் எடுத்து ஆடுவது நல்லது என்றும், வீட்டில் படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பை வெறும் வயிற்றுடன் அனுப்பக்கூடாது என்றும், அதற்கு பால் வைக்கும்படியும் கூறினர். இதையடுத்து ஆபத்தை உணராத லட்சுமி ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்து அந்த பாம்பு முன் வைத்தார்.
ஆனால் பாம்பு, பாலை குடிக்காமல் தொடர்ந்து படம் எடுத்து ஆடியது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த மேலும் சிலர் லட்சுமி வீட்டிற்கு வந்து அந்த பாம்பை பிடித்து காட்டிற்குள் கொண்டு சென்று விட்டனர்.
பின்னர் லட்சுமியிடம், பாம்பு வீட்டிற்கு வந்தால் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு அல்லது பாம்புபிடி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களை செய்ய கூடாது என அறிவுரை வழங்கினர்.