மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
- மாணவர்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
- மாணவர்கள் கட்டாயம் இணைய வழி மூலம் வருமான சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் இந்த ஆண்டு (2022-2023) கல்வி உதவித்தொகை பெற இணைய வழியில் விண்ணப்பிப்பது குறித்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகைக்கான விண்ண ப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டரால் தெரிவிக்கப்பட்டது.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இணைய வழியில் விண்ணப்பிக்க புதிய இணைய தளம் 30.01.2023 அன்று திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரடியாக தங்களின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் வகையில் https://tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
அனைத்து வகை கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை இணைய வழியில் விண்ணப்பிக்கப்பட்டதை சம்பந்தப்பட்ட கல்லூரி பொறுப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அதே போன்று மாணவர்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்கள் கட்டாயம் இணைய வழி மூலம் வருமான சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும். மாணாக்கரின் வங்கி கணக்கில் இடம் பெற்றுள்ள பெயர், அம்மாணவர்களின் பள்ளி சான்றிதழ்களில் உள்ளவாறு இடம் பெற்றுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே அனைத்து மாணவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பதிவு செய்து பயன் பெறுமாறு மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்கள்.