தமிழ்நாடு

பிரதமர் மோடி இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வந்தால் தமிழகம் தடையாக இருக்காது- அப்பாவு

Published On 2024-09-17 08:15 GMT   |   Update On 2024-09-17 08:38 GMT
  • ஒவ்வொரு இடங்களிலும் ஒரு பட்டாலியன் என்று அழைப்பார்கள்.
  • ஆட்சியாளர்கள் மக்கள் நலன் சார்ந்தே முடிவெடுப்பார்கள்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் தேசிய பேரிடர் குழுவின் மண்டல மையத்தை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் இயற்கை பேரிடர்கள் அதிகமாக ஏற்பட்ட காலத்தில் பொதுமக்களை பாதுகாப்பதற்கு என்ன செய்யலாம் என்பதற்காக 2005-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி இந்த தேசிய பேரிடர் ஆணையம் ஒன்று இந்திய அளவில் உருவாக்கப்பட்டது.

2006-ம் ஆண்டு , முதல் கட்டமாக 6 மாநிலங்களில் 6 இடங்களில் இந்த தேசிய பேரிடர் மேலாண்மை பட்டாலியன் அமைக்கப்பட்டது. முதல் முதலாக அசாம், மேற்கு வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் உட்பட 6 இடங்களில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இந்தியா முழுவதும் 16 இடங்களில் உள்ளது . ஒவ்வொரு இடங்களிலும் ஒரு பட்டாலியன் என்று அழைப்பார்கள்.

பட்டாலியன் என்றால் 18 குழுக்கள் இருக்கும். ஒவ்வொரு குழுவிலும் 47 தேர்ந்தெடுக்கப்பட்ட படைவீரர்கள் இருப்பார்கள். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உட்பட இந்த பகுதிகளுக்கு ஏதேனும் பேரிடர் ஏற்பட்டால் இந்த குழுவினர் தான் முதன் முதலாக சென்று மீட்பு பணியில் ஈடுபடுவர்.

அரக்கோணத்தில் இருந்து ஏற்கனவே ஒரு மையம், கேரள மாநிலம் திருச்சூரில் ஆரம்பிக்கப்பட்டது. 3-வது சென்னையில் ஒன்று ஆரம்பிப்பதற்கு உத்தரவிடப்பட்டு அதிவிரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது . இப்போது ராதாபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இது நம்முடைய முதலமைச்சர் அனுமதியோடு நமது மாவட்ட கலெக்டர் கடுமையான முயற்சி செய்து இந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


இதில் 30 வீரர்கள் தொடர்ந்து பணியில் இருப்பார்கள். இந்த பகுதியில் எந்த பிரச்சனையில் ஏற்பட்டாலும் உடனடியாக இவர்கள் அரக்கோணத்தில் இருக்கின்ற அந்த தலைமை அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு மீட்பு பணியை செய்வார்கள். மேலும் மாநில பேரிடர் குழு, மாவட்ட அளவிலும் பேரிடர் குழு உள்ளது. அதனுடனும் இணைந்து தேசிய பேரிடர் குழுவினர் செயல்படுவார்கள்.

ராதாபுரத்தில் பேரிடர் மீட்பு குழு மண்டல மையம் அமைந்துள்ளதற்கு தமிழக அரசு சார்பிலும், இப்பகுதி மக்கள் சார்ரபிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மதுவிலக்கு விவகாரத்தில் முதலமைச்சரும், திருமாவளவனும் நாடகம் ஆடுவதாக மத்திய இணைமந்திரி எல்.முருகன் கூறினார். மது விலக்கு என்பது ஒருகட்சியின் கொள்கை. அவர்கள் மாநாடு நடத்தலாம். அதில் தப்பு இல்லை. மக்கள் விரும்புவர்களே ஆட்சிக்கு வருவார்கள். அந்த ஆட்சியாளர்கள் மக்கள் நலன் சார்ந்தே முடிவெடுப்பார்கள்.

பிரதமர் மோடி இந்தியா முழுவதும் மதுவிலக்கை கொண்டு வந்தால் தமிழகம் அதற்கு தடையாக இருக்காது. நிரந்தரமாக தேசிய பேரிடர் மையம் அமைவதற்கு நெல்லை மாவட்டம் வள்ளியூர் மற்றும் ராதாபுரம் பகுதிகளில் 5 ஏக்கர் இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News