தமிழ்நாடு

அ.தி.மு.க. மாநாடு நடைபெறும் வளையங்குளம் பகுதியில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை படத்தில் கணலாம்.

மதுரையில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு 50 ஆயிரம் வாகனங்களில் தொண்டர்கள் வருகை

Published On 2023-08-09 06:23 GMT   |   Update On 2023-08-09 06:23 GMT
  • அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி வருகிற 19-ந்தேதி மாலை மதுரை வருகிறார்.
  • மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வானதையடுத்து முதன்முறையாக அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20-ந்தேதி நடக்கிறது. இதற்காக மதுரை வளையங்குளம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பில் மாநாட்டு மேடை மற்றும் பந்தல் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த பணிகளை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் மதுரையில் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் பங்கேற்க வசதியாக மாநாட்டு திடல் அருகே 5 இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மாநாட்டில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகனங்களை சிரமமின்றி நிறுத்தவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தாமல் மாநாட்டை சிறப்பாக நடத்தவும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாநாட்டில் பங்கேற்கும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு தயிர் சாதம், புளி சாதம், லெமன் சாதம் வழங்கப்படுகிறது இதற்காக 250 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் உணவு பரிமாற திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்படுகின்றன. மாநாட்டிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி வருகிற 19-ந்தேதி மாலை மதுரை வருகிறார். 20-ந்தேதி காலை 10 மணிக்கு மாநாட்டு திடலுக்கு வரும் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள பிரம்மாண்ட கொடி கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை தொண்டர்கள் புடை சூழ ஏற்றி வைக்கிறார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது. தொடர்ந்து அ.தி.மு.க. அரசின் சாதனைகள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள் தொடர்பான புகைப்பட கண்காட்சி அரங்கையும் அவர் திறந்து வைக்கிறார்.

மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டுப்புற பாடகர்களான செந்தில்-ராஜலட்சுமி குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், மதுரை முத்துவின் நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது.

இதைத் தொடர்ந்து திரைப்பட பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான தேவாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக பேச்சாளர்கள் பங்குபெறும் கவியரங்கம் மற்றும் அ.தி.மு.க. சாதனை விளக்க பேச்சரங்கம் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

மாலை 5 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதில் முதலாவதாக மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. பின்னர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரளுகிறார்கள். மதுரையில் நடைபெறும் இந்த அரசியல் மாநாடு அ.தி.மு.க.வின் வீர வரலாற்றில் எழுச்சி மாநாடு மட்டுமல்ல, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அதிகாரத்தை மீண்டும் நிலை நிறுத்தும் வகையில் அமையும் மாபெரும் வெற்றி மாநாடாகவும் அமையும் என்று முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News