சின்னமனூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து பிளஸ்-2 மாணவர் பலி
- பலத்த காயமடைந்த பார்த்தசாரதி சின்னமனூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் வாட்டர் டேங்க் பின்புறம் வசித்து வருபவர் கண்ணன். இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அருள்கார்த்திகா (17) என்ற மகளும், பார்த்த சாரதி (16) என்ற மகனும் உள்ளனர்.
பார்த்தசாரதி ஓடைப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று தனது நண்பரின் ஆட்டோவை பார்த்த சாரதி சுக்காங்கால்பட்டி அருகே ஓட்டிச் சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த பார்த்தசாரதி சின்னமனூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்தசாரதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.