தமிழ்நாடு

கவர்னர் ஆர்.என்.ரவி நாளை சேலம் வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published On 2023-11-22 04:06 GMT   |   Update On 2023-11-22 04:06 GMT
  • கவர்னர் ஆர்.என். ரவி செல்லும் பாதை மற்றும்பெரியார் பல்கலைக்கழக பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
  • நாளை இரவு கவர்னர் ஆர்.என்.ரவி பெரியார் பல்கலைக்கழகத்தில் தங்குகிறார்.

சேலம்:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (23-ந்தேதி)சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் அங்கிருந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு காரில் வருகிறார். அவரை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்.

டெல்லியில் ஏற்கனவே நடைபெற்ற ஜி 20 மாநாடு தொடர்பாக பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை மாலை 4.30 மணியளவில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். பின்னர் நாளை இரவு கவர்னர் ஆர்.என்.ரவி பெரியார் பல்கலைக்கழகத்தில் தங்குகிறார்.

தொடர்ந்து நாளை மறுநாள் (24-ந்தேதி) பெரியார் பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துகிறார். இதையொட்டி கவர்னர் ஆர்.என். ரவி செல்லும் பாதை மற்றும்பெரியார் பல்கலைக்கழக பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News