தமிழ்நாடு (Tamil Nadu)

உயிருடன் வந்த பழனிச்சாமி.

விபத்தில் இறந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு

Published On 2022-10-21 07:35 GMT   |   Update On 2022-10-21 07:35 GMT
  • கடந்த சில நாட்களாக பழனிச்சாமி பற்றி எந்த தகவலும் அவரது குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை.
  • குடும்பத்தினர் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடதுரை அருகே உள்ள பெரியகோட்டை பாறைப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது72). கூலித்தொழிலாளியான இவர் கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டு 2 அல்லது 3 நாட்கள் கழித்து வருவது வழக்கம்.

கடந்த சில நாட்களாக அவரைப்பற்றி எந்த தகவலும் அவரது குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை. இதனால் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் ஒரு அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் இறந்துள்ளார். அவர் பழனிச்சாமிதானா? என்று பாருங்கள் என கூறி உள்ளனர். முகம் சிதைந்து இருந்ததால் உறவினர்களும் சரிவர பார்க்காமல் இவர்தான் பழனிச்சாமி என்று கூறி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் உடலை ஒப்படைத்து கையெழுத்து பெற்று விட்டனர். வீட்டிற்கு கொண்டு வந்து அந்த உடலுக்கு இறுதி சடங்கு செய்தனர்.

இந்தநிலையில் நேற்று இறந்ததாக கருதப்பட்ட பழனிச்சாமி உயிருடன் வீட்டிற்கு வந்தார். அவரை பார்த்ததும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தான் வேலை விஷயமாக பக்கத்து ஊருக்கு சென்றதால் தகவல் தெரிவிக்க முடியவில்லை என வீட்டில் கூறினார்.

பழனிச்சாமி வீட்டிற்கு திரும்பிய அதிர்ச்சி ஒருபுறம் இருக்க நாம் யாருக்கு இறுதிச் சடங்கு செய்து காரியம் நடத்தினோம் என்று அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இறந்த நபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News