தமிழ்நாடு

மாலைமலர் செய்தி எதிரொலி: மெய்யூர் கொசஸ்தலை ஆற்றில் தற்காலிக தரைப்பாலத்தை ஒரு வாரத்தில் அமைத்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட எம்.எல்.ஏ.

Published On 2022-12-22 10:15 IST   |   Update On 2022-12-22 10:15:00 IST
  • ஒருவார காலத்திற்குள் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், போக்குவரத்தை மேம்படுத்தும் வகையிலும் தற்காலிக தரைபாலம் அமைத்து தரப்படும்.
  • இன்னும் ஆறு மாத காலத்திற்குள் மேம்பால பணிகள் முற்றிலும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், வெங்கல் அருகே மெய்யூர்- மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் பூண்டி ஏரியின் உபரி நீர் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால் இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு திருவள்ளூருக்கு சென்று வருகின்றனர்.

இதுகுறித்து மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி நேற்று பிரசூரிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை மெய்யூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா, இரண்டு ட்ரான்ஸ்பார்மர்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் மேற்கண்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சேதமடைந்த தரைப்பாலத்தை பார்வையிட்டார்.

மேலும், புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளையும் ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போது, ஒரு வார காலத்திற்குள் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், போக்குவரத்தை மேம்படுத்தும் வகையிலும் தற்காலிக தரைபாலம் அமைத்து தரப்படும். இன்னும் ஆறு மாத காலத்திற்குள் மேம்பால பணிகள் முற்றிலும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனையும் விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியின்போது பூண்டி ஒன்றிய திமுக செயலாளர்கள் டி.கே.சந்திரசேகர், பொன்னுசாமி, திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் தில்லை குமார், ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா சரத்பாபு மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News