தமிழ்நாடு (Tamil Nadu)

விடாது பெய்த மழை - ஓ.பி.எஸ். புரட்சி பயண பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

Published On 2023-09-03 15:16 GMT   |   Update On 2023-09-03 15:16 GMT
  • ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
  • ஓ.பி.எஸ். புரட்சி பயணத்தின் தொடக்கமாக இந்த பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடந்தாண்டு ஜூலை மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தை அங்கீகரித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி விட்டது.

இதைத் தொடர்ந்து தன் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்க மாவட்டம்தோறும் சென்று பொதுக்கூட்டம் நடத்த ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்து, இந்த சந்திப்புக்கு 'புரட்சி பயணம்' என்று பெயரிட்டார். இதன் துவக்கமாக இன்று காஞ்சிபுரம் அருகே கலியனூர் பொதுக்கூட்டத்தில் பேச திட்டமிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டு விட்டது. இன்றைய பொதுக்கூட்டம் திடீரென நிறுத்தப்பட்ட நிலையில், வேறொரு நாளில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறும் என்று ஓ.பி.எஸ். அணியில் இடம்பெற்று இருக்கும் பண்ரூட்டி ராமச்சந்திரன் அறிவித்து இருக்கிறார்.

Tags:    

Similar News