தமிழ்நாடு

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மழையில் தவழ்ந்து சென்ற நோயாளி

Published On 2024-06-04 01:38 GMT   |   Update On 2024-06-04 01:38 GMT
  • உடனிருந்த கவனித்து கொள்ள ஆள் இல்லாத காரணத்தினால், வார்டில் இருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
  • தகவல் அறிந்த டீன் ரேவதி பாலன், உடனடியாக அந்த நோயாளியை மீட்டு வார்டில் சேர்க்க உத்தரவிட்டார்.

நெல்லை:

நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். நோயின் தீவிரத்துக்கு ஏற்ப, ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெறுகிறார்கள்.

இந்த நிலையில் சக்திவேல் (வயது 60) என்ற நோயாளி உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவரை உடனிருந்த கவனித்து கொள்ள ஆள் இல்லாத காரணத்தினால், வார்டில் இருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மரத்தடியில் படுத்திருந்தார். நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்து கொண்டிருந்தது. மழையில் நனைந்து விட்டதால் சக்திவேல் தவழ்ந்தபடி அவசர சிகிச்சை கட்டிடத்தை நோக்கி சென்றார்.

இதனைப் பார்த்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த டீன் ரேவதி பாலன், உடனடியாக அந்த நோயாளியை மீட்டு வார்டில் சேர்க்க உத்தரவிட்டார்.

இதையடுத்து ஆஸ்பத்திரி ஊழியர்கள், முதியவரை மீட்டு சக்கர நாற்காலியில் அமர வைத்து வார்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நோயாளி மழையில் நனைந்தபடி தவழ்ந்து செல்வதும், அவரை மீட்டு ஊழியர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News