தமிழ்நாடு

அதியமான்கோட்டை அருகே இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை

Published On 2023-06-07 06:45 GMT   |   Update On 2023-06-07 06:45 GMT
  • பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
  • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொப்பூர்:

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடத்தூரான் கொட்டாய் அருகே நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் இன்று அதிகாலையில் பொதுமக்கள் நடந்து சென்றனர்.

அப்போது அங்கு ஒரு பெண் பிணமாக கிடந்தார். அந்த பெண்ணின் முகத்தில் கைபையை வைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனே அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணின் முகத்தில் வைக்கப்பட்டிருந்த கைபையை எடுத்து சோதனை செய்து விசாரணை நடத்தினர்.

இதில் அந்த பெண் தருமபுரி பழைய ரெயில்வே லைன் பகுதி கோல்டன் தெருவைச் சேர்ந்த புவனேஸ்வரன் என்பவரின் மகள் ஹர்ஷா (வயது23) என்பதும், இவர் ஓசூரில் உள்ள தனியார் பார்மசி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் என்பதும், அவரை மர்ம நபர் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு உடலை இந்த வனப்பகுதியில் வீசி சென்றுள்ளனர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும், அவரை யாராவது கற்பழித்து விட்டு கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை வனப்பகுதியில் வீசி சென்றனரா? அல்லது காதல் விவகாரத்தில் ஹர்ஷாவை யாராவது கொலை செய்து உடலை வீசி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News