தமிழ்நாடு (Tamil Nadu)

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2024-10-20 04:18 GMT   |   Update On 2024-10-20 04:18 GMT
  • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.60 அடியாக உள்ளது. அணைக்கு 326 கனஅடி நீர் வருகிறது.
  • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 55 அடியில் நீடித்து வருகிறது.

கூடலூர்:

புதிய 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று இரவு தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

நேற்று இரவு பெரியகுளம், வடுகபட்டி, டி.கல்லுப்பட்டி, கைலாசபட்டி, தேவதானப்பட்டி, மேல்மங்களம், ஜெயமங்களம், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. அதனை தொடர்ந்து இரவு முழுவதும் மிதமான சாரல் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதன் மூலம் ஆறு, குளம், கண்மாய், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.60 அடியாக உள்ளது. அணைக்கு 326 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 833 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2556 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 5692 அடியாக உள்ளது. 1098 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 869 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3040 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 55 அடியில் நீடித்து வருகிறது. அணைக்கு வரும் 100 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.24 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 30 கனஅடி.

ஆண்டிபட்டி 29.2, அரண்மனைபுதூர் 2.2, பெரியகுளம் 10.4, மஞ்சளாறு 9, சோத்துப்பாறை 3.8, வைகை அணை 36.8, போடி 6.6, உத்தமபாளையம் 2.2, கூடலூர் 1.2, பெரியாறு அணை 11.4, சண்முகாநதி அணை 3.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News