தமிழ்நாடு (Tamil Nadu)

லட்சக்கணக்கான குடும்பங்களின் குழந்தைகளுக்கு புத்தாடை கிடைத்திருப்பதை மது பறித்து விட்டது- ராமதாஸ் கருத்து

Published On 2022-10-25 06:52 GMT   |   Update On 2022-10-25 06:52 GMT
  • தீப ஒளி, பொங்கல் போன்ற திருவிழாக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டுமானால் அந்த காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
  • அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தீப ஒளி திருநாளுக்கு முந்தைய நாளில் ரூ.259 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது. தீபஒளி நாளன்று ரூ.300 கோடிக்கும் கூடுதலாக மது விற்பனை செய்யப்படக்கூடும் என்று டாஸ்மாக் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு தீபஒளி திருநாளுக்கு முதல் நாளில் ரூ.205 கோடிக்கும், தீப ஒளி நாளில் ரூ. 225 கோடிக்கும் மது விற்பனையான நிலையில், அதை விட இந்த ஆண்டு அதிகமாக மது விற்பனையாகியிருக்கிறது. மது விற்பனை அதிகரித்திருப்பது எந்த வகையிலும் சாதனையல்ல.... அவமானம். இரு நாட்களில் மதுவுக்காக செலவிடப்பட்ட சுமார் ரூ.600 கோடி ஆக்கப்பூர்வமாக செலவிடப்பட்டிருந்தால், லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும் கிடைத்திருக்கும். லட்சக்கணக்கான குடும்பங்களின் மகிழ்ச்சியை மது பறித்திருப்பது வேதனையானது.

தீப ஒளி, பொங்கல் போன்ற திருவிழாக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டுமானால் அந்த காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News