தமிழ்நாடு

திருமணமான பிறகு காதலியை அபகரித்து குடும்பம் நடத்திய ரவுடி வெட்டிக்கொலை

Published On 2024-05-16 09:59 GMT   |   Update On 2024-05-16 09:59 GMT
  • மனைவியை அபகரித்துக் கொண்டு கவுதம் குடும்பம் நடத்தி வருவதை ஜீரணிக்க முடியாமல் இருந்த அவர் இதுபற்றி தனது நண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.
  • வழக்கில் 3 பேர் சரண் அடைந்துள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான பிரியாவின் கணவர் ராஜ்கிரண் அவரது நண்பர்கள் சுகுமார், மணி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை:

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம்பேட் தெருவை சேர்ந்தவர் கவுதம். 27 வயதான இவர் மீது தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் அடிதடி மற்றும் குற்ற வழக்குகள் உள்ளன. இதனால் காவல் நிலைய சரித்திர பதிவேட்டிலும் கவுதமின் பெயர் இடம்பெற்று உள்ளது. கொலை முயற்சி வழக்கு ஒன்றும் இவர் மீது உள்ளது. இதனால் போலீசார் கவுதமை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் மனைவி பிரியா மற்றும் 2 குழந்தைகளோடு கவுதம் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 11 மணியளவில் வீட்டின் கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டது. இதனால் கவுதமும், பிரியாவும் திடுக்கிட்டு எழுந்தனர். அப்போது வீட்டுக்கு வெளியே கும்பலாக ஆட்கள் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தனர். இதனால் பயந்து போன கவுதம் கதவை திறக்காமல் வீட்டுக்குள்ளேயே இருந்தார். நீண்ட நேரமாகவே தட்டியும் திறக்காததால் வெளியில் நின்றிருந்த 6 பேரும் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.

அவர்களது கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதைப்பார்த்ததும் கவுதமும் பிரியாவும் கலங்கிப் போனார்கள். குழந்தைகளும் கதறி துடித்தன. உயிர் பிழைக்க வழி தெரியாமல் கவுதம் வீட்டுக்குள்ளேயே தவித்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் கவுதமை சரமாரியாக வெட்டியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் மனைவி, குழந்தைகள் கண் எதிரே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து துடிதுடித்து பலியானார்.

பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தனது கண் எதிரே கவுதம் கொலை செய்யப்பட்டதை பார்த்து பிரியா கதறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர். இதனால் சைதாப்பேட்டை ஸ்ரீராம்பேட் தெருவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் சைதாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ரவுடி கவுதமின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கவுதமை வெட்டிக்கொன்ற 6 பேரில் பிரதீப், சுரேஷ், ராஜா பாய் ஆகிய 3 பேர் தேனாம்பேட்டை போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை தேனாம்பேட்டை போலீசார் சைதாப்பேட்டை போலீசாரிடமும் ஒப்படைத்தனர். 3 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.

சைதாப்பேட்டை வீட்டில் கவுதமின் மனைவியாக வாழ்ந்து வந்த பிரியா அவரது முன்னாள் காதலி என்பதும் திருமணமாகி 2 குழந்தைகள் பிறந்த பிறகும் பிரியாவை மறக்க முடியாமல் முதல் கணவரிடம் இருந்து கவுதம் அபகரித்துக் கொண்டு குடும்பம் நடத்தியதும் அம்பலமானது. இது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாகவே பிரியாவின் முதல் கணவரான ராஜ்கிரண், தனது நண்பர்களோடு சேர்ந்து கவுதமை வீடு புகுந்து வெட்டிக் கொன்றதும் தெரிய வந்துள்ளது.

ரவுடி கவுதமும், பிரியாவும் ஒருவரையொருவர் விரும்பி காதலித்து வந்துள்ளனர். ஆனால் பிரியாவின் வீட்டில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்கிரணை திருமணம் செய்து வைத்துள்ளனர். ராஜ்கிரண்- பிரியா தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்தனர். இருப்பினும் கவுதமால் பிரியாவை மறக்க முடியவில்லை. அவரோடு சேர்ந்து வாழ விரும்பினார். இதற்கு தடையாக இருந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் கவுதம், பிரியா இருவரும் சேர்ந்து ராஜ்கிரணை கொலை செய்ய முயன்றுள்ளனர். இது தொடர்பாக கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் வெளியில் வந்து கவுதம் மற்றும் பிரியா இருவரும் சைதாப்பேட்டையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதை தொடர்ந்து ராஜ்கிரண் கவுதமை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். மனைவியை அபகரித்துக் கொண்டு கவுதம் குடும்பம் நடத்தி வருவதை ஜீரணிக்க முடியாமல் இருந்த அவர் இதுபற்றி தனது நண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். அப்போதுதான் வீட்டில் தூங்கும் போது கவுதமை கொலை செய்வது என அவர்கள் முடிவு செய்தனர்.

இதன்படி நேற்று இரவு வீட்டுக்கு சென்று சரமாரியாக வெட்டிக் கொன்று உள்ளனர். இந்த வழக்கில் 3 பேர் சரண் அடைந்துள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான பிரியாவின் கணவர் ராஜ்கிரண் அவரது நண்பர்கள் சுகுமார், மணி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News