தமிழ்நாடு

மே தினத்தை முன்னிட்டு 24 மணி நேரத்தில் 92 பேருக்கு இலவசமாக முடி திருத்தி சாதனை- சலூன் கடைக்காரருக்கு குவியும் பாராட்டு

Published On 2023-05-02 09:00 GMT   |   Update On 2023-05-02 09:00 GMT
  • சபரிநாதன் தனது வேலையில் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்து வந்தார்.
  • உழைப்பாளர் தினத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

சேலம்:

சேலம் மாரமங்கலத்துப் பட்டியை சேர்ந்த கோவிந்த ராஜ் மகன் சபரிநாதன், (வயது 35) சிகையலங்கார கலைஞரான இவர், அதே பகுதியில் 10 ஆண்டுகளாக சலூன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு காயத்திரி என்ற மனைவியும், யோகேஸ்வரன், என்ற 2 வயது மகனும் உள்ளனர்.

சபரிநாதன் தனது வேலையில் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்து வந்தார். மே தினத்தையொட்டி தொழிலாளர்களின் திறமையையும், பெருமையையும் உணர்த்தும் வகையில் அவர் உலக சாதனை படைக்க திட்டமிட்டார்.

அதன்படி நேற்று முன்தினம் காலை 9.15 மணி முதல் நேற்று காலை 9.15 மணி வரை, 24 மணி நேரம் தொடர்ந்து 45 பேருக்கு கட்டிங் சேவிங், 47 பேருக்கு கட்டிங் மட்டும் என மொத்தம் 92 பேருக்கு இலவசமாக முடி திருத்தம் செய்தார்.

இவரது சாதனையை அங்கீகரித்து, வேர்ல்டு சூப்பர் டேலண்ட் அமைப்பு சார்பில் சபரிநாதனை பாராட்டி சான்றிதழ் வழங்கியது. சபரிநாதனின் இந்த சாதனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.

இது குறித்து சபரிநாதன் கூறுகையில், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நான், என் முடி திருத்தும் தொழிலுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இலவசமாக 92 பேருக்கு 24 மணி நேரம் தொடர்ந்து முடிதிருத்தி சாதனை புரிந்துள்ளேன். உழைப்பாளர் தினத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Tags:    

Similar News