தமிழ்நாடு

தமிழக சட்டசபை ஜூன் 24-ல் கூடுகிறது - சபாநாயகர்

Published On 2024-06-07 06:57 GMT   |   Update On 2024-06-07 06:57 GMT
  • 24-ந்தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.
  • கூட்டத்தொடருக்கு முன்னதாக அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும்.

சென்னை:

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி நடைபெற்ற போது இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

அப்போது அரசு தயாரித்து கொடுத்த கொள்கை உரையில் தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்த கவர்னர் 2 நிமிடங்களில் தனது உரையை முடித்து இருக்கையில் அமர்ந்தார். சட்டப்பேரவை நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று நான் முன் வைத்த கோரிக்கை தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தயாரித்த உரையில் இடம் பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்துக்கு முரணாகவும் உள்ளதால் இதை நான் வாசித்தால் அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால் உரையை முடித்துக் கொள்கிறேன் என்று அப்போது அவர் கூறினார்.

இதன் பிறகு சபாநாயகர் அப்பாவு கவர்னர் உரையின் தமிழாக்கத்தை முழுவதையும் வாசித்து முடித்தார். இது அன்றைய தினம் சட்டசபையில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியது. அதற்கு மறுநாளில் இருந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர்.

அதைத் தொடர்ந்து 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும், வேளாண்மை பட்ஜெட்டும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது நடைபெற்ற விவாதங்களுக்கும் அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதில் சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

மேலும் 24-ந்தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். கூட்டத்தொடருக்கு முன்னதாக அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். எந்தெந்த நாட்களில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இந்த முறை நடைபெறும் சட்டசபைக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, போதைப் பொருள் விவகாரம், குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சமிருக்காது என தெரிகிறது.

Tags:    

Similar News