மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா- நாளை விஜய் பேசப்போகும் அரசியல் என்ன?
- விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் செல்போன், பேப்பர், பேனா, இதர பொருட்கள் எடுத்து வர அனுமதி இல்லை.
- நுழைவு கூப்பனில் உள்ள நபர்கள் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா நாளை மற்றும் ஜூலை 3-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடக்கிறது.
மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் செல்போன், பேப்பர், பேனா, இதர பொருட்கள் எடுத்து வர அனுமதி இல்லை. நுழைவு கூப்பனில் உள்ள நபர்கள் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை நடைபெற உள்ள ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் விஜய் 10 நிமிடங்கள் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி தொடங்கிய பின் முதல் முறையாக ஊக்கத்தொகை வழங்கி, விஜய் பேச உள்ளதால் அரசியல் கருத்துகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் அம்பேத்கர், பெரியார், காமராஜர் பற்றி படியுங்கள். பணம் வாங்காமல் வாக்களியுங்கள் என பெற்றோருக்கு வலியுறுத்த மாணவர்களிடம் விஜய் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.