தமிழ்நாடு

நள்ளிரவில் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ரவுடி தணிகா மீது துப்பாக்கி சூடு- ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2023-10-12 06:41 GMT   |   Update On 2023-10-12 06:41 GMT
  • போலீசாரால் சுட்டுபிடிக்கப்பட்ட ரவுடி தணிகா மீது மொத்தம் 17 வழக்குகள் உள்ளன.
  • படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செங்கல்பட்டு:

பெரியபாளைம் அருகே உள்ள கன்னிகைபேர் காலனி பகுதியை சேர்ந்தவர் தணிகா என்கிற தணிகாசலம்(வயது36). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த 2014-ம் ஆண்டு சித்தாமூர் பகுதியில் நடந்த ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக தணிகாசலம் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து அவர் மீது கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீனில் வரமுடியாத வகையில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த தணிகாவை போலீசார் தேடி வந்தனர்.

இதைத்தொடர்ந்து ரவுடி தணிகா உள்பட தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனீத் உத்தரவின்படி செங்கல்பட்டு தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பிரதாப் ஆகியோர் கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு சென்னை எஸ்.ஆர்.எம்.சி. ஆஸ்பத்திரி அருகே பதுங்கி இருந்த ரவுடி தணிகாவை தனிப்டை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் மேல் விசாரணைக்காக சித்தாமூர் போலீஸ்நிலையத்துக்கு போலீசார் அவரை வாகனத்தில் அழைத்து சென்றனர்.

செங்கல்பட்டு அருகே லாரல் மால் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது ரவுடி தணிகா திடீரென பாதுகாப்புக்கு இருந்த போலீசாரை தாக்கி விட்டு ஓடும் வாகனத்தில் இருந்து கீழே குதித்து இருட்டான பகுதிக்கு தப்பி ஓடமுயன்றார்.

அவரை போலீசார் விரட்டி சென்று பிடிக்க முயன்றபோது தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் புகழ் தனது கைத்துப்பாக்கியால் 2 ரவுண்டு ரவுடி தணிகாவை சுட்டார். இதில் வலது கால் முழங்கால் மற்றும் வலது கையின் மேல் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சுருண்டு விழுந்தார்.

அவரை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு கை, காலில் பலத்த காயத்துடன் ரவுடி தணிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசாரால் சுட்டுபிடிக்கப்பட்ட ரவுடி தணிகா மீது மொத்தம் 17 வழக்குகள் உள்ளன. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவாரூர், விருதுநகர், தூத்துக்குடி மாவ ட்டங்களில் வெடிபொருட்கள் பயன்படுத்தி 8 கொலை வழக்குகளும், ஒரு கொலை முயற்சி வழக்கு மற்றும் ஆயுதம் மற்றும் வெடி பொருட்களை பயன்படுத்திய ஒரு கலவர வழக்கும், 2 கொள்ளை வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சோழவரம் அருகே 2 ரவுடிகள் எண்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் செங்கல்பட்டு அருகே ரவுடி தணிகா மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News