தமிழ்நாடு

போக்குவரத்துத்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்- டிடிவி தினகரன்

Published On 2024-07-22 12:54 GMT   |   Update On 2024-07-22 12:54 GMT
  • தொழிலாளார்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.
  • மினி பேருந்துகளை இயக்கும் அனுமதியை தனியாரிடம் வழங்குவது மேலும் மோசமான விளைவையே ஏற்படுத்தும்

அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, அம்பத்தூர் உட்பட தமிழகம் முழுவதும் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான தமிழக அரசின் புதிய வரைவுத்திட்ட அறிக்கையும், அது தொடர்பான இன்று நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டமும் அரசுப் போக்குவரத்துத்துறையை தனியார்மயமாக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.

தமிழகத்தில் லாப நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு விதிமுறைகளை மீறி இயங்கி வரும் தனியார் பேருந்துகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில், தற்போது சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கூடுதல் மினி பேருந்துகளை இயக்கும் அனுமதியை தனியாரிடம் வழங்குவது மேலும் மோசமான விளைவையே ஏற்படுத்தும் என போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

ஏற்கனவே அரசுப் பேருந்துகளின் வழித்தடங்கள் இருக்கும் இடங்கள் உட்பட 25 கிலோ மீட்டர் தூரம் வரை தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதிப்பது, சென்னை போன்ற பெருநகரங்களில் ஆட்டோ (Auto), ஷேர் ஆட்டோ (Share Auto), மேக்சி கேப் (Maxi Cab ) போன்ற வாகனங்களை இயக்கி வரும் தொழிலாளார்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.

எனவே, தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கி போக்குவரத்துத்துறையை படிப்படியாக தனியார் மயமாக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிடுவதோடு, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலமாகவே ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News