தமிழ்நாடு (Tamil Nadu)

தி.மு.க. ஆட்சியில் விக்கிரவாண்டி தொகுதி முன்னேற்றம் கண்டுள்ளது- தமிழக அரசு பெருமிதம்

Published On 2024-07-08 07:46 GMT   |   Update On 2024-07-08 07:46 GMT
  • நான் முதல்வன் திட்டத்தில் 39,186 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.
  • வன்னிய மாணவர்களின் எண்ணிக்கை 74-ஆக ஏறத்தாழ மூன்று மடங்கு உயர்ந்தது.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "எல்லோருக்கும் எல்லாம்" என்ற தத்துவத்துடன் திராவிட மாடல் ஆட்சியை இந்தியாவிற்கே வழிகாட்டும்வண்ணம் சிறப்பாக நடத்தி வருகிறார்.

எல்லா மாவட்டங்களிலும் அரசின் திட்டங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் காலை உணவுத் திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 63 ஆயிரத்து 168 மாணவர்களும், விக்கிரவாண்டியில் 10,651 மாணவர்களும் சூடான, சுவையான சிற்றுண்டி உட்கொண்டு கல்வியைத் தொடர்கின்றனர்.

நான் முதல்வன் திட்டத்தில் 39,186 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.

1 லட்சத்து 43 ஆயிரத்து 33 முதியோருக்கு மாத ஓய்வூதியம் ரூ.314.67 கோடி, முதல்வரின் முகவரி திட்டத்தில் 1,24,356 மனுக்களுக்குத் தீர்வு , சுயதொழில் தொடங்கிட கடன் ரூ.1,388.67 கோடி, 16ஆயிரத்து 128 மகளிர்க்கு சுயஉதவிக்குழு கடன் ரத்து ரூ.24.43 கோடி, 20 ஆயிரத்து 799 குடும்பங்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி ரூ.90.13 கோடி , 30ஆயிரத்து 798 பேருக்கு உழவர் பாது காப்புத் திட்ட ஓய்வூதியம் ரூ.67.75 கோடி, 3 ஆயிரத்து 781 ஏழைப் பெண்களுக்கு 14.66 கோடி திருமண நிதியுடன், ரூ.16.52 கோடி மதிப்பில் 30.248 கிலோ தங்க நாணயங்கள், புதுமைப் பெண் திட்டத்தில் 9 ஆயிரத்து 488 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, 3 லட்சத்து 49 ஆயிரத்து 257 குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, என வழங்கி மக்களைக் காக்கும் மகத்தான அரசாக திகழ்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள வன்னியர் உட்பட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கும், சீர்மரபினருக்கும் 1989-ல் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. இதனால் 1988-1989-ம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 68 என்பது இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டபின் 1989-1990-ல் 187 ஆக உயர்ந்தது.

இவர்களில் வன்னிய மாணவர்களின் எண்ணிக்கை 74-ஆக ஏறத்தாழ மூன்று மடங்கு உயர்ந்தது.

இதேபோல், பொறியியல் கல்லூரியில் 1988-1989இல் 354 ஆக இருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் சேர்க்கை 1989-1990-ல் 685-ஆக உயர்ந்தது. இவர்களில் வன்னிய மாணவர்களின் எண்ணிக்கை 109 என்பது 292 ஆக ஏறத்தாழ 3 மடங்கு உயர்ந்தது.

இட ஒதுக்கீடு கோரி, வன்னியர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் உயிர்நீத்த 27 பேரின் குடும்பங்களுக்கு 1998-ல் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கியது தி.மு.க. அத்துடன், இந்த 27 சமூக நீதிப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியமாக மாதம் 1500 ரூபாய் அனுமதித்ததும் தி.மு.க.தான்.

அந்தக் குடும்ப ஓய்வூதியத்தை நவம்பர் 2006 முதல் மாதம் 1,500 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கியதும் தி.மு.க.தான்.

ராமசாமி படையாச்சியார் திருவுருவச்சிலை 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்ச் செலவில் சென்னை கிண்டியில் அமைத்து திறந்து வைக்கப்பட்டதும் தி.மு.க. ஆட்சியில் தான்.

காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளுக்கு ரூ.5 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைத்திட ஆணையிட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விழுப்புரம் மாவட்டத்திலும் சிறப்பான பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், இம்மாவட்டம் முன்னேற்றத் திசையில் நடைபோடுகிறது. விக்கிரவாண்டி சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News