தமிழ்நாடு (Tamil Nadu)

கவியருவியில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

ஆயுத பூஜை விடுமுறையொட்டி கோவை, நீலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2024-10-12 04:19 GMT   |   Update On 2024-10-12 04:19 GMT
  • ஊட்டியை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர்.
  • சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி இன்றும், நாளையும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

ஊட்டி:

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ணமான சூழ்நிலையை அனுபவிக்கவும், அங்குள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர்.

அதுவும் விடுமுறை தினங்கள், கோடை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். தற்போது ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையொட்டி பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நேற்று காலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி மலைப்பாதையில் பயணித்து நீலகிரிக்கு சென்றனர். இதனால் அந்த சாலையில் வழக்கத்தை விட போக்குவரத்து அதிகமாக இருந்தது. ஊட்டியை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர்.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் குவிந்தனர். அவர்கள் அங்கு 2-வது சீசனையொட்டி மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர்களை கண்டு ரசித்தனர். அதன்முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டனர்.அத்துடன் தாவரவியல் பூங்காவில் உள்ள புல்தரையில் அமர்ந்து பேசி, குழந்தைகளுடன் விளையாடியும் தங்கள் விடுமுறையை கழித்தனர்.

ஊட்டி ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம், மரவியல் பூங்கா, பைக்காரா படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

அவர்கள் அங்குள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து, அங்கு நிலவிய இதமான காலநிலையை அனுபவித்தனர்.

இதேபோல் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, டால்பினோஸ் காட்சி முனை, காட்டேரி பூங்கா, கோத்தகிரி நேரு பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி இன்றும், நாளையும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இன்று காலை 8.20 மணிக்கு குன்னூரில் இருந்து சிறப்பு ரெயில் ஊட்டிக்கு புறப்பட்டது. இந்த ரெயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பயணித்தனர். இதேபோல் ஊட்டி-கேத்தி இடையே 3 ரவுண்ட் ஜாய் ரைட் சிறப்பு ரெயிலும் இயக்கப்பட்டது.

சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக நீலகிரியில் உள்ள அனைத்து சாலைகளிலுமே போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்களில் சாலைகளில் காத்திருந்து புறப்பட்டு சென்றதையும் காண முடிந்தது. சுற்றுலா பயணிகள் வருகையால் சுற்றுலா தலங்களையொட்டி உள்ள கடைகளிலும் வியாபாரம் சூடுபிடித்தது.

விடுமுறை தினத்தையொட்டி கோவையில் உள்ள சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. பொள்ளாச்சி ஆழியார் அணை பூங்காவுக்கு திருப்பூர், கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கார்கள், மோட்டார் சைக்கிள், பஸ்கள், வேன்கள் உள்ளிட்டவற்றில் வந்திருந்தனர்.

அவர்கள் ஆழியார் அணை, அணை பூங்கா உள்ளிட்டவற்றையும் பார்த்து ரசித்தனர். ஆழியார் அருகே உள்ள கவியருவியிலும் (குரங்கு நீர்வீழ்ச்சி) சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ச்சியடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் ஆழியார் பகுதியில் உள்ள கடைகளிலும் வியாபாரம் களை கட்டியது.

இதேபோல் கோவை குற்றாலம், வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்களு க்கு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தற்போது கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து, குளர்ச்சியான கால நிலையே நிலவி வருகிறது. சுற்றுலா தலங்களில் நிலவிய இதமான காலநிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர். 

Tags:    

Similar News