தமிழ்நாடு (Tamil Nadu)

பச்சை நிறமாக மாறிய வீராணம் ஏரி தண்ணீர்... காரணம் என்ன?

Published On 2024-06-01 01:05 GMT   |   Update On 2024-06-01 01:05 GMT
  • கடந்த 17-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
  • பூதங்குடி பகுதியில் இருந்து மெட்ரோ அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்து தான் சென்னைக்கு அனுப்பி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்குகிறது வீராணம் ஏரி. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. வெயில் தாக்கம் காரணமாக ஏரி வறண்டதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைப்பதற்காக மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி கடந்த 17-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நீர் கல்லணை, கீழணை வழியாக வடவாறு மூலம் வீராணம் ஏரியை வந்தடைந்தது. இதன் மூலம் வறண்டு கிடந்த ஏரியில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இதையடுத்து சென்னைக்கு மீண்டும் குடிநீர் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. அதன்படி கடந்த 29-ந்தேதி முதல் சென்னைக்கு வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் இடமான பூதங்குடி மற்றும் வெய்யலூர் பகுதியில் தண்ணீர் பச்சை நிறத்தில் காட்சி அளித்து வருகிறது. இவை அகலம் குறைந்த பகுதிகள். மற்ற இடங்களில் தண்ணீர் வழக்கம் போல் உள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். கால்நடைகள், பறவைகள் தண்ணீர் குடிப்பதால் ஏதேனும் ஆபத்து நேரிடுமோ என்று பீதி அடைந்தனர்.

இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பூதங்குடி பகுதியில் இருந்து மெட்ரோ அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்து தான் சென்னைக்கு அனுப்பி வருகின்றனர்.

தற்போது தண்ணீர் பச்சை நிறத்தில் இருப்பதாக தகவல் பரவியது. இதற்கு காரணம் தண்ணீரில் படர்ந்துள்ள பாசி தான். தண்ணீரில் உள்ள செடி, கொடிகள் எல்லாம் சேர்ந்து தெரியும் போது, அவை பச்சை நிறத்தில் தெரிகிறது. மற்றபடி எவ்வித ரசாயனமும் கலக்கவில்லை. தண்ணீரை மெட்ரோ அதிகாரிகள் மாதிரி எடுத்து ஆய்வு செய்து விட்டார்கள். தண்ணீரில் எதுவும் கலக்கவில்லை. ஆகவே பொதுமக்கள் இதுபற்றி அச்சப்பட தேவையில்லை என்றார்.

Tags:    

Similar News