திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஒரே நாளில் 56 திருமணங்கள்
- கோவில் வளாகம் முழுவதும் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.
- கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
பண்ருட்டி:
முகூர்த்த நாளையொட்டி திருவதிகை வீரட்டானேஸ்வர் கோவிலில் இன்று 56-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக முகூர்த்த நாட்களில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்படுவதோடு, கோவில் வளாகத்தில் திருமண நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
அந்த வகையில் இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் இன்று அதிகாலை முதல் சுமார் 56-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை வாழ்த்துவதற்கு அவர்களின் உறவினர்களும் அதிக அளவில் வருகை தந்ததால், கோவில் வளாகம் முழுவதும் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.
இதனால் கோவிலில் ஆங்காங்கே நின்றவாறு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு கோவில் அருகே மணமக்கள் போட்டோஷூட்களை நடத்தினர். தற்போது கோவிலுக்குள் உணவருந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், மாட வீதியில் உள்ள தனியார் வீடுகள், மண்டபங்கள் சாலைகளில் உணவு அருந்தினர். மேலும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.