திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
- இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் கோவில் வளாகத்தில் நடந்தது.
- வழக்கம்போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆன்மீக சுற்றுலா தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் இருந்து ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரண்டனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் கோவில் வளாகத்தில் நடந்தது. கோவில் சார்பில் பதிவு செய்யப்பட்ட மணமக்களுக்கு அரசு சார்பில் சீர்வரிசையுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதனால் கூட்டம் அலைமோதியது.
வழக்கம்போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30-க்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.