தமிழ்நாடு (Tamil Nadu)

தி.மு.க. கூட்டணிக்குள் புகைச்சல் ஆரம்பித்து விட்டது- எடப்பாடி பழனிசாமி

Published On 2024-10-22 08:51 GMT   |   Update On 2024-10-22 08:51 GMT
  • முதலாவது மாநில மாநாடு நடத்தும் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்.
  • யார் போராட்டம் நடத்தினாலும் முறையாக நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

சேலம்:

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி: தி.மு.க. அமைச்சர் மீது 400 கோடி ரூபாய் ஊழல் புகார் வெளியாகி இருப்பது குறித்து?

பதில்: முழுமையாக இந்த விபரம் பற்றி தெரியவில்லை. எந்த அமைச்சர்? எந்த துறை? என்ன மாதிரி ஊழல் என தெரிந்தால் தான் அது பற்றி சொல்ல முடியும்.

தி.மு.க. ஆட்சியில் ஒரு துறையில் மட்டுமல்ல பெருபான்மையான துறைகளில் அமைச்சர்கள் மிகப்பெரிய ஊழல் செய்கின்றனர். 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு எந்த எந்த துறைகளில் எல்லாம் ஊழல் நடந்திருக்கிறது என கண்டுபிடித்து வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும்.

கே: சென்னையில் வெள்ளம் நிவாரணம் குறித்த வெள்ளை அறிக்கை கேட்டு இருப்பது பற்றி?

ப: ஏற்கனவே இது பற்றி நான் சொல்லிவிட்டேன். வெள்ள நிவாரணம் குறித்து நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் என்ன என்ன நடவடிக்கை எடுத்தோம் என்பது குறித்து தெளிவாக அறிக்கை வெளியிட்டோம். சென்னையில் வெள்ள நீர் வேகமாக வடிந்தது. வேகமாக வெளியேற்றப்பட்டது. ஆனால் தி.மு.க. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் கொஞ்சம் மழைக்கே தாக்குபிடிக்கவில்லை.

கே: தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரை முதலமைச்சராக்க வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கை குறித்து?

ப: தி.மு.க. கூட்டணி இன்றைக்கு வலிமையாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இப்போது கம்யூனிஸ்ட்டு கட்சி என்னவாயிற்று? கூட்டணியில் புகைச்சல் ஆரம்பித்து விட்டது. அதுபோல் காங்கிரசில் இருக்கிற திருச்சி வேலுசாமி, தி.மு.க.வினர் போற்றுதலுக்குரிய பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசும்போது இப்படியே தொடர்ந்தால் நாங்களும் பேசுவோம் என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார். இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தி.மு.க.விடம் கோரிக்கை வைத்து எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கூட்டணி இருக்குமா? இல்லையா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சட்டமன்றத் தேர்தலுக்காக சிறப்பான கூட்டணி அ.தி.மு.க. அமைக்கும். பெரும்பான்மை இடத்தில் வெற்றி பெறுவோம். நடிகர் விஜய் திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். மக்களுக்கு விஜய்யும் பொதுசேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார் அதன் விருப்பத்தில் கட்சி தொடங்கியுள்ளார். முதலாவது மாநில மாநாடு நடத்தும் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 36ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றது. யார் போராட்டம் நடத்தினாலும் முறையாக நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. எதிர்க்கட்சி மட்டுமில்லாமல் மற்ற கட்சிகளுக்கும் அனுமதி கொடுப்பதில்லை.

ஒவ்வொரு அரசியல் கட்சியும் கனவு கண்டு கொண்டிருக்கிறது எல்லா அரசியல் கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று தான் அனைவரின் விருப்பம். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மக்களுடைய கையில் தான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News